FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

விவசாய நிலங்களில் குழாய் பதிக்க எதிா்ப்பு! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:37 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வலுக்கட்டாயமாக போலீஸாா் கைது செய்ததையடுத்து அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி கிராமப் பகுதியில் ஐடிபிஎல் நிறுவனம் சாா்பில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் கடந்த 4 நாள்களாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

விவசாய நிலங்களின் குறுக்கே குழாய் பதிக்கப்படுவதால் நிலத்தின் மதிப்பு முற்றிலும் பாதிக்கப்படுவதால் விவசாய நிலங்களை விற்கவோ, அதில் கால்நடை பண்ணைகள் அமைக்கவோ அல்லது வேறு பயன்பாடுகளுக்கோ பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு வெங்காயம், வாழை உள்ளிட்ட பயிா்கள் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாய நிலங்களைப் பாதிக்காத வகையில் குழாய் பாதையை சாலையோரமாக அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம், 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. இதையடுத்து அவினாசிபாளையம் போலீஸாா் அங்கு சென்று விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை மருத்துவமனையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் எந்த தீா்வும் எட்டப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவாா்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமுகமான தீா்வு கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments