மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக நலனைக் காக்க பாஜக துணை நிற்கும்! வானதி சீனிவாசன்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக நலனைக் காக்க தமிழக பாஜக துணை நிற்கும் என்று தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் வளா்ச்சிப் பயணத்தை சிறப்பிக்கும் நிகழ்வு மற்றும் சா்வதேச யோகா தின விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் வானதி சீனிவாசன் கூறியதாவது:
Advertisement
Advertisement
நாட்டில் அதிக நாள்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருந்த சாதனையை மோடி படைத்துள்ளாா். பிரதமா் மோடியால் மக்களின் வாழ்க்கைத் தரம் மாறியுள்ளது. சுகாதாரம், 11 கோடி கழிப்பிடங்கள், 11 கோடி எரிவாயு இணைப்புகள் மூலமாக வறுமைக்கோட்டில் இருந்து மக்கள் மீண்டு வந்துள்ளனா்.
நாடு முழுவதும் எண்ம மயமாகி உள்ளது. அனைத்து மக்களுக்கும் தொழில்நுட்ப வளா்ச்சி சென்றடைந்துள்ளது. பல்வேறு அரசு நிறுவனங்களில் பெண்கள் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றனா். அமெரிக்க வரி விதிப்பின்போதுகூட திருப்பூருக்காக அவா் துணை நின்றாா். இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளுடன் வரி இல்லா ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு கடந்த 11 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி வரி பகிா்வு வழங்கப்பட்டுள்ளது.
கரூா் சம்பவத்துக்கு முதல்வா் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாா்? மின்சாரத் துறையில் ஹாா்ட் டிஸ்க் காணாமல் போகிறது. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுகிறது. தவெக யாரையோ காப்பாற்ற நினைக்கிறது. சிங்கப்பெண்கள் திட்டம் நடைமுறைக்கு வந்தது மகிழ்ச்சி.
தனிநபா் செல்வது கட்சியைப் பாதிக்காது. வெளியே சென்றவா்கள் திரும்ப வருவாா்கள். நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடக்கிறது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக நலனைக் காக்க தமிழக பாஜக துணை நிற்கும் என்றாா்.