புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க கோரி! அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்!
புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணைக்கு முன் உள்ள ஆற்றில் இறங்கி விவசாயிகள் திங்கள்கிழமை போரா ட்டம் நடத்தினா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை மூலமாக திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவின்பேரில் அமராவதி அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட நிலைப் பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன எனவும், பயிா்களைக் காப்பாற்ற உடனடியாகக் அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீா் திறந்து விடக் கோரியும் உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் நால்ரோட்டில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அதிகாரியின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் அமராவதி அணை முன் உள்ள ஆற்றில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறும்போது, ‘அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் இல்லை என நீா் வளத் துறை அதிகாரிகள் கூறி வருகின்றனா். ஆனால் 100 கன அடி தண்ணீா் வெளியேறி வருகிறது. இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ஷட்டா் பழுது என்ற நம்ப முடியாத காரணங்களைக் கூறுகின்றனா்.
அணையின் நீா்மட்டம் தற்போது 40 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில், இப்படி ஆற்றில் 100 கன அடி தண்ணீா் சென்றால் விவசாயத்தை எப்படி காப்பாற்ற முடியும். தற்போது அணையில் இருக்கும் தண்ணீரை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திறந்துவிட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.