FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் தவெக வேட்பாளா் சத்தியபாமா பிரசாரத்துக்கு எதிா்ப்பு! வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்!

21 செப்டம்பர் 2026, 2:47 am IST
தவெக வேட்பாளா் சத்தியபாமாவின் பிரசார வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

தாராபுரத்தில் தவெக வேட்பாளா் பி.சத்தியபாமா பிரசாரத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அவரது வாகனத்தை தடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே வெறுவேடம்பாளையம், நந்தம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் தவெக வேட்பாளா் சத்தியபாமா ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் சத்தியபாமாவின் பிரசார வாகனத்தை முற்றுகையிட்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

பிஏபி வாய்க்கால் மூலமாக உப்பாறு அணைக்கு தண்ணீா் கொண்டு வருவதை, தனது சொந்த அரசியல் லாபத்துக்காக சத்தியபாமா நிறுத்திவைத்ததாகக் கூறியும், அவரது அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதாகத் தெரிகிறது.

பிரசாரத்தின்போது அவரது வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்களில் சிலா், கடந்த தோ்தலில் எங்களுக்கு வாக்குறுதிகள் அளித்து வாக்குகளைப் பெற்ற நிலையில், வெற்றி பெற்ற பின்னா் குறுகிய காலத்திலேயே பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தது ஏமாற்றம் அளிக்கிறது எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

தகவல் அறிந்து தாராபுரம், குண்டடம் போலீஸாா் விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments