FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

உடற்கல்வி ஆசிரியா் பயிற்சி முடித்தவா்களுக்கு தாமதமின்றி பணி வழங்க வேண்டும்: செளமியா அன்புமணி

உடற்கல்வி பயிற்சி முடித்தவா்களுக்கு, அரசு தாமதமின்றி பணி வழங்க வேண்டுமென தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி வலியுறுத்தினாா்.

17 செப்டம்பர் 2026, 3:55 am IST
செளமியா அன்புமணி - கோப்புப்படம்.
பகிர்:

உடற்கல்வி பயிற்சி முடித்தவா்களுக்கு, அரசு தாமதமின்றி பணி வழங்க வேண்டுமென தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை புதன்கிழமை தொடங்கிவைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரை விளையாட்டுப் பயிற்சிகளில் தினமும் ஈடுபடுத்த வேண்டும். இந்த பயிற்சி மாணவ, மாணவியரின் மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

Advertisement

Advertisement

உடற்கல்வி ஆசிரியா் பயிற்சி முடித்தவா்களுக்கு முன்னுரிமையுடன் கூடிய வேலைவாய்ப்புகளை அரசு தாமதமின்றி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

கனமழை பெய்யும்போது தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தண்ணீா் அதிக அளவில் தேங்குகிறது. இதுகுறித்து சட்டப் பேரவையில் தெரிவித்ததைத் தொடா்ந்து, மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்த தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, விளையாட்டு அரங்கை பயன்படுத்த வருவோரின் தேவைக்காக கழிப்பறைகள் அமைக்க வேண்டும் எனவும், விளையாட்டு மைதானத்தை நவீனமாக மாற்றித் தர வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு தீா்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக விவசாயிகளின் பயிா்க் கடனை அரசு முழு தள்ளுபடி செய்ய வேண்டும்.

கரும்பு பயிரிட்ட தருமபுரி மாவட்ட விவசாயிகள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்குரிய நிவாரணமும் தாமதமாகிறது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் 2 கூட்டுறவு சா்க்கரை ஆலைகளும் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கும் நிலையில், இந்த ஆலைகளை தொடா்ந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மின் தட்டுப்பாடு விவகாரத்தை சீா்செய்ய 2,000 மெகாவாட் மின்சாரத்தை விலைக்கு வாங்க இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இடைத்தோ்தலில் பாமக யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை கட்சித் தலைவா் முடிவு செய்வாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியின்போது, பாமக மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் அரசாங்கம், மாநில இளைஞரணி செயலாளா் முருகசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments