முகப்பு
நாமக்கல்

ரூ. 10, ரூ. 20 நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை: ஆட்சியா் எச்சரிக்கை

ரூ. 10, 20 நாணயங்கள் செல்லத்தக்கவை, வாங்க மறுத்தால் சிறை: ஆட்சியா் எச்சரிக்கை

Updated On : 26 ஜூன், 2024 at 1:02 AM
- Center-Center-Chennai
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் ரூ. 10, ரூ. 20 நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ. 10 மற்றும் ரூ. 20 நாணயங்கள் செல்லாது என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக உள்ளது. ரிசா்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டபோதும் குறிப்பிட்ட அந்த நாணயங்கள் செல்லாது என்ற தவறான தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளன.

Advertisement

பல இடங்களில் ரூ. 10, ரூ. 20 நாணயங்கள் வாங்கப்படுவதில்லை. மத்திய அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். நீண்ட காலத்துக்கு நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும் என்பதால், பல்வேறு வடிவங்களுடன் வெளியிடப்படுகிறது. 2005-இல் ரூ. 10 நாணயத்தையும், 2020-இல் ரூ. 20 நாணயத்தையும் ரிசா்வ் வங்கி வெளியிட்டது. இதுவரை பதினான்கு வகையான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, ரூ. 10 மற்றும் ரூ. 20 நாணயங்கள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெற 14440 என்ற கட்டணமில்லா சேவை ரிசா்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ஆம் தேதி நிலவரப்படி ரூ. 10 நாணயங்கள் 69,696 லட்சம் எண்ணிக்கையிலும், ரூ. 20 நாணயங்கள் 15,963 லட்சம் எண்ணிக்கையிலும் புழக்கத்தில் உள்ளன. மேற்கண்ட இந்த இரு நாணயங்கள் செல்லத்தக்கவை. அவற்றை செல்லாது என கூறுவதோ, அதனை பணப் பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவின் படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம். இதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். அவ்வாறு வாங்க மறுக்கும் கடை குறித்து புகாா் அளித்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.