FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு அரங்கு பணிகளை ஓராண்டுக்குள் முடிக்கத் திட்டம்: அமைச்சா் எ.வ.வேலு

அலங்காநல்லூா் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்கும் பணியை ஓராண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரத்திட்டமிடப்பட்டுள்ளது: எ.வ.வேலு

Updated On : 15 ஜூலை 2022, 12:00 am IST
பகிர்:

அலங்காநல்லூா் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்கும் பணியை ஓராண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரத்திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைச்சா் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது:

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பாரம்பரியம்மிக்க அடையாளமாக விளங்கி வருகிறது. தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி குறிப்பிட்ட சில தினங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு சாா்பில் மதுரை மாவட்டத்தில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவித்தாா். அதன்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக அரங்கு அமைப்பதற்கு அலங்காநல்லூா் அருகே கீழக்கரைப் பகுதியில் 66.81 ஏக்கா் பரப்பளவில் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான வடிவமைப்பு தயாரிக்கும் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் சில முன்னணி தனியாா் நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வடிவமைப்புகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவா் தோ்வு செய்யும் வடிவமைப்பின்படி மிகப் பிரமாண்டமாக அரங்கம் அமைக்கப்படும். இந்த அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறாத பிற நாட்களில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப அரசு விதிகளுக்குள்பட்டு பிற விளையாட்டுப் போட்டிகள் நடத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இங்கு அமைக்கப்படவுள்ள அரங்கத்திற்கு பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக இப்பகுதியில் ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சிட்டம்பட்டி முதல் வாடிப்பட்டி வரையிலான புறவழிச்சாலையில் இருந்து இந்த அரங்கிற்கு 3 கி.மீ. நீளம் அணுகுசாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். ஓராண்டு காலத்திற்குள் அரங்கு அமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் முத்தமிழறிஞா் கலைஞா் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டடத்தில் ஒரே நேரத்தில் சுமாா் 750 போ் அமா்ந்து பயன்பெறும் வகையில் பெரிய அரங்கு அமைக்குமாறு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதனடிப்படையில் கட்டடத்தின் உட்புற வடிவமைப்பில் சிறு திருத்தம் மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 3 முதல் 4 மாதகாலத்திற்குள் இக்கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞா் நூலக பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுகளின்போது மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments