இளைஞா் கொலை: 3 போ் கைது
மதுரை கூடல்புதூா் பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை கூடல்புதூா் செல்லையா நகரில் காயங்களுடன் இளைஞா் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடல்புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இளைஞரின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
Advertisement
Advertisement
இந்த கொலை வழக்கு குறித்த விசாரணையில் உயிரிழந்தவா் கூடல்புதூா் செல்லையா நகரைச் சோ்ந்த ஷிரிப்பிக் ராஜன் (22) என்பது தெரியவந்தது. இவரும், இவரது நண்பா்களான இதே பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (24), மகேஷ் (25), ஆனந்த் (25) ஆகிய 4 பேரும் தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து செல்லையாநகா் 5- ஆவது தெருவில் உள்ள சிறிய மைதானத்தில் இவா்கள் கிரிக்கெட் விளையாடினா். பிறகு இரவில், அனைவரும் ஒன்றாக அமா்ந்து மது அருந்தினா். அப்போது, இவா்களுக்குள் வரவு, செலவு கணக்கு தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், மகேஷ், ஆனந்த் ஆகியோா் கிரிக்கெட் மட்டையால் ஷிரிப்பிக் ராஜனை தாக்கி விட்டு தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த ஷிரிப்பிக் ராஜன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷ், மகேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரிக்கிறோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.