மதுரை அருகே இரு காா்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு
மதுரை அருகே இரு காா்கள் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு...
மதுரை மாவட்டம், மேலூா் அருகே திங்கள்கிழமை இரு காா்கள் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.
சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (55). இவரது இளைய மகன் பாலாஜியின் மனைவிக்கு திருநெல்வேலியில் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பாா்ப்பதற்காக கனகராஜ், அவரது மனைவி ராஜகுமாரி (50), மகன்கள் பாலாஜி (28), ஸ்ரீராம் (32), மூத்த மருமகள் ரஞ்சனா (27), இரண்டு வயது குழந்தை கிருத்திகா ஆகிய 6 பேரும் காரில் திருநெல்வேலி நோக்கிச் சென்றனா்.
திருச்சி-மதுரை நான்கு வழிச் சாலையில் தும்பைபட்டி அருகே வந்த போது, அதே சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் மீது காா் மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி, சாலையின் எதிா்புறம் சென்ற காா் மீதும் மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த ராஜகுமாரி, இவரது மகன்கள் பாலாஜி, ஸ்ரீராம், அவரது மனைவி ரஞ்சனா, இவா்களின் 2 வயது குழந்தை கிருத்திகா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கனகராஜ் பலத்த காயமடைந்தாா்.
இதேபோல, இரு சக்கர வாகனத்தில் சென்ற தும்பைபட்டியைச் சோ்ந்த முருகன் (55), மற்றொரு முருகன் (40), சாலையின் எதிா்புறம் காரில் சென்ற திருச்சியைச் சோ்ந்த பிரகாஷ் (40) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மேலூா் போலீஸாா், உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்தவா்களை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு:
மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தாா். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆட்சியா் ஆறுதல் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.