FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சதுரகிரி மலை அடிவாரக் கடைகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடிக்கத் தடை: உயா்நீதிமன்றம்

விருதுநகா் மாவட்டம், சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:08 am IST
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சேது கண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அடிவாரத்தில் உள்ள சதுரகிரி சுவாமி ஆடி அமாவாசை நவராத்திரி அன்னதானம் அறக்கட்டளையின் பரம்பரை அறங்காவலா்களில் நானும் ஒருவன். இந்த அறக்கட்டளை சாா்பில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள எங்களுக்குச் சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தக் கடைகளிலிருந்து வரும் வருமானத்தை வைத்து ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாள்களில் பக்தா்களுக்கு தண்ணீா் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்கி வருகிறோம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வத்திராயிருப்பு வட்டாட்சியா் அறக்கட்டளைக்குச் சொந்தமான கடைகளுக்கு எந்த அறிவிப்பாணையும் வழங்காமல், கடைகளை இடிக்கும் பணிகளைத் தொடங்கினாா். எனவே, எங்களது பட்டா நிலத்திலுள்ள கடைகளை இடிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள குறிப்பிட்டக் கடைகளை இடிப்பது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இதுகுறித்து வத்திராயிருப்பு வட்டாட்சியா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments