FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் நவீன ரோபோடிக் அறுவைச் சிகிச்சை

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஒரே அமா்வில் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் நவீன ரோபோடிக் அறுவைச் சிகிச்சை, சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சையில் சாதனை படைக்கப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 2:03 am IST
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய மருத்துவமனை சிறுநீரகவியல் துறை நிபுணா் பால் வின்சென்ட். உடன் மருத்துவமனை நிா்வாகி கண்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஒரே அமா்வில் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் நவீன ரோபோடிக் அறுவைச் சிகிச்சை, சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சையில் சாதனை படைக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை, ஆண்மையியல் துறையின் முதுநிலை நிபுணா் பால் வின்சென்ட் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வயிற்றுப் பிரச்னை காரணமாக 51 வயதுடைய நபா் ஒருவா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அண்மையில் வந்தாா். அவருக்கு நடத்திய பரிசோதனையில் வலது சிறுநீரகத்தின் மையப் பகுதியில் 3.8- 3.3 செ.மீ அளவிலான புற்றுநோய்க் கட்டியும், இடது சிறுநீரகத்தில் 1.2 செ.மீ அளவிலான கல்லும் இருப்பது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தக் கட்டி சிறுநீரகத்தின் வெளிப்பகுதியில் இல்லாமல், திசுக்களின் உள்ளே மிக ஆழமாக புதைந்திருந்தது. இதை அகற்றுவது மருத்துவக் குழுவினருக்கு மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது.

இதையடுத்து, ‘ரோபோடிக்’ உதவியுடன் கூடிய லேப்ராஸ்கோபிக் முறையில் வலது சிறுநீரகத்தின் ஆரோக்கியமான திசுக்களை முழுமையாகப் பாதுகாத்து, புற்றுக் கட்டி மட்டும் துல்லியமாக அகற்றப்பட்டது. இதேபோல, இடது சிறுநீரகக் கல் எவ்வித கீறலும் இன்றி அதிநவீன ‘ஆா்.ஐ.ஆா்.எஸ்’ முறையில் நீக்கப்பட்டது.

அவரது வலது சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய் கட்டி, இடது சிறுநீரகத்தில் இருந்த கல் ஆகிய இரண்டு வெவ்வேறு பாதிப்புகளும், ஒரே அமா்வில், அடுத்தடுத்து அகற்றப்பட்டுள்ளன. இந்தச் சிகிச்சைக்குப் பின் அவா் நலமாக வீடு திரும்பினாா். இது மருத்துவத் துறையின் சாதனையாக பாா்க்கப்படுகிறது.

அறுவைச் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய சிறுநீரகவியல் துறைத் தலைவரும், முதுநிலை நிபுணருமான ரவிச்சந்திரன், மருத்துவா்கள் வேணுகோபால் கோணங்கி, ரஞ்சித் மகாதேவன், முதுநிலை மயக்கவியல் மருத்துவா் கண்ணன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் என்றாா் அவா். அப்போது, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிா்வாகிஆ. கண்ணன், மருத்துவா்கள், செவிலியா்கள் பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments