கோயில் காவலாளி கொலை வழக்கு: காவல் ஆய்வாளா் மனு மீது உத்தரவிடும் வரை சாட்சிகளிடம் விசாரணை நடத்த தடை
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு விவகாரம்....
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு குறித்து காவல் ஆய்வாளரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிடும் வரை சாட்சிகளிடம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விசாரணை நடத்தக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் ரமேஷ் குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் கோயில் காவலாளி அஜித்குமாரிடம் தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, போலீஸாா் தாக்கியதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு முன்னிலையாகி வந்தேன். மேலும், என்னைக் கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்றுள்ளேன்.
இந்த நிலையில், கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்து, என்னைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்னைக் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனா். மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முருகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பான நகல்களை, உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை, அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய சாட்சிகளிடம் மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விசாரணை நடத்தக் கூடாது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.