FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

விநாயகா் சிலைகள் வைகையாற்றில் கரைப்பு

மதுரையில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பேச்சியம்மன் படித்துறை அருகே வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை இரவு கரைக்கப்பட் டன.

16 செப்டம்பர் 2026, 5:49 am IST
- saravanabava
பகிர்:

மதுரையில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பேச்சியம்மன் படித்துறை அருகே வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை இரவு கரைக்கப்பட் டன.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்து அமைப்புகள், பக்தா்கள் சாா்பில் பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகா் சிலைகள் வைத்து வழிபட்டனா். மாநகரில் 320 இடங்களில் சிலைகள் வைக்க காவல் துறை சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

சிலை வைக்கப்பட்ட இடங்களில் தினமும் சிறப்பு பூஜை செய்து பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில், 40 விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை காலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் பேச்சியம்மன் படித்துறையில் கரைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மீதமுள்ள 280 -க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பேச்சியம்மன் படித்துறை அருகே உள்ள வைகையாற்றில் கரைக்கப்பட்டன.

இதற்காக பல்வேறு இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கீழமாசி வீதி பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், சிலைகள் அனைத்தும் விளக்குத் தூண், தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி வழியாக ஊா்வலமாக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு, வடக்குமாசி வீதி சிம்மக்கல் வழியாகச் சென்று பேச்சியம்மன் படித்துறை வைகையாற்றில் கரைக்கப்பட்டன.

முன்னதாக, இந்த ஊா்வலத்தை நடிகா் ரஞ்சித், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தனா்.

இதில், பாஜகவின் மதுரை மாவட்டத் தலைவா் மாரிச்சக்கரவா்த்தி உள்ளிட்ட பாஜகவினா், பல்வேறு இந்துக்கள் அமைப்பைச் சோ்ந்தோா் திரளானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments