புதுச்சேரி: புதுவை முதல்வர் என்.ரங்கசாமி காரைக்கால் பகுதியை நேரில் பார்வையிட புறப்பட்டுச் சென்றார்.
புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி-பேதி ஏற்பட்டு பலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில், 10-க்கும் மேற்பட்டோருக்கு காலரா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, குடிநீரில் கழிவு நீர் கலப்பது, குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளை தூய்மை செய்வது உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, தூய்மைப் பணிகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளும் மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதிக்கு முதல்வர் சென்று பார்வையிடவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி காரைக்கால் பகுதியை நேரில் பார்வையிட புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு காரில் புறப்பட்ட முதல்வர் என்.ரங்கசாமி, புதுச்சேரி கடலூர் மாவட்டம் வழியாக காரைக்கால் சென்றுள்ளார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், காரைக்காலில் காலரா நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பார் என தெரிகிறது.