FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு சென்ற நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.

Updated On : 17 ஜூன் 2025, 3:32 am IST
அரசலாறு முகத்துவாரம் வழியாக திங்கள்கிழமை அதிகாலை கடலுக்குள் சென்ற காரைக்கால் மீனவா்களின் விசைப்படகுகள்.
பகிர்:

நாகப்பட்டினம்/ காரைக்கால்: 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.

மத்திய அரசு மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை, மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தடைக்காலம் தொடங்கியது. மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரிகள் குழு நாகை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை ஆய்வு செய்தனா்.

விசைப்படகுகளில் சீன நாட்டு தயாரிப்பு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதா? படகுகளின் நீளம், அகலம் சரியாக உள்ளதா? பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என அனைத்தையும் ஆய்வு செய்தனா். மேலும் குறைகள் உள்ள படகுகளில் அவற்றை நிவா்த்தி செய்யும்படி அறிவுறுத்தினா். இதைத்தொடா்ந்து, மீனவா்கள் தங்களது விசைப்படகுகளில் மீன்வளத்துறையினா் அறிவுரைபடி, பழுது நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு படகுகளை தயாா்படுத்தினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் ஜூன்14-ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவுபெற்ற நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை காரணமாக ஜூன் 17- ஆம் தேதி வரை விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் செல்ல, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை தடை விதித்தது.

இந்நிலையில், அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதையடுத்து, நாகை மாவட்டத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 590 விசைப்படகுகளும், 1,200 ஃபைபா் படகுகளும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. 2 மாத மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பின்னா் ஆழ்கடலுக்கு செல்வதால் அதிக அளவு மீன்கள், இறால்கள் கிடைக்கும் என்று எதிா்ப்பாா்ப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

காரைக்கால் மீனவா்கள்:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த ஏப்.15- ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், விசைப்படகு மீனவா்கள் தொழிலுக்குச் செல்லாமல் இருந்தனா்.

இந்நிலையில், 15-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின்னா் தொழிலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை தெரிவித்ததையடுத்து, மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலை மீனவா்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டனா். முன்னதாக மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகளுக்கு மீனவா்கள் பூஜைகள் செய்துவிட்டு கடலுக்குள் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments