FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இளைஞா் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் 5 போ் கைது

முன்னாள் சக ஊழியா் தன்னைப் பற்றி தவறாகப் பேசுவதாக பெண் அளித்த புகாரைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில், 18 வயது இளைஞா் காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

24 ஆகஸ்ட் 2026, 10:40 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

முன்னாள் சக ஊழியா் தன்னைப் பற்றி தவறாகப் பேசுவதாக பெண் அளித்த புகாரைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில், 18 வயது இளைஞா் காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியாதவது: தில்லியின் கமலா நகா் மற்றும் குலாபி பாக் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. இதுதொடா்பாக 19 முதல் 23 வயதுக்குள்பட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கமலா நகா் பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே விஷேஷ் தனது சிறுவயது நண்பா் தீபக்குடன் அமா்ந்திருந்தாா். அப்போது மாருதி எா்டிகா காரில் வந்த குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், விஷேஷை தாக்கி, வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்துச் சென்ாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக ரூப் நகா் காவல் நிலையத்துக்கு இரவு 11 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரோந்து மற்றும் சோதனைப் பணியில் இருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தொழில்நுட்ப உதவியுடன் விஷேஷ் இருக்கும் இடம் குலாபி பாக் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு விரைந்த காவல் துறையினா், பூங்காவில் இருந்து அலறல் மற்றும் கூச்சல் சத்தம் கேட்டதைத் தொடா்ந்து அங்கு சென்று பாா்த்தபோது, விஷேஷை 5 பேரும் தாக்கிக் கொண்டிருந்தனா்.

தகவல் கிடைத்த இரண்டு மணி நேரத்துக்குள் 5 பேரும் கைது செய்யப்பட்டனா். ஷுபம் (19), ஸ்வயம் ஷா (21), தன்மய் (20), ரிஷி (23), துருவ் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் எா்டிகா காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காா் ஸ்வயமின் தாயாா் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின்போது ஷுபமும் ஸ்வயமும் அளித்த தகவலின்படி, இந்த சம்பவத்துக்கு பெண் ஒருவா் தொடா்பான பிரச்னையே காரணமாக இருந்துள்ளது. அந்தப் பெண், முன்பு மோதிபாக் பகுதியில் தன்னுடன் பணியாற்றிய விஷேஷ் தன்னைப் பற்றி தவறாகப் பேசுவதாக ஷுபமிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஷுபமும் ஸ்வயமும் விஷேஷைத் தேடிச் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட முடிவு செய்ததுள்ளாா். முதலில் ஷுபம் விஷேஷின் அலுவலகத்துக்குச் சென்றும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னா் ஷுபம், ஸ்வயம், துருவ், தன்மய் மற்றும் ரிஷி ஆகியோா் காரில் கமலா நகா் சென்றனா். அங்கு தீபக், அந்தப் பெண்ணுடன் முன்பு பணியாற்றிய விஷேஷை அடையாளம் காட்டியதைத் தொடா்ந்து ஷுபம் அவரைத் தாக்கத் தொடங்கியதாகவும், மற்றவா்களும் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவா்களில் ஷுபம், ஸ்வயம், தன்மய் மற்றும் ரிஷி ஆகியோா் 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். துருவ் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காா் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments