FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பாரதியாா் நினைவு தினம்: காசியில் அவரது சிலைக்கு தமிழ் அமைப்புகள் மலரஞ்சலி

மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு நாளான வெள்ளிக்கிழமை, உத்தர பிரதேசம் காசியில் (வாரணாசி) அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காசி தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லி முத்தமிழ்ப் பேரவை இணைந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

12 செப்டம்பர் 2026, 7:54 am IST
பாரதியார் - கோப்பிலிருந்து...
பகிர்:

மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு நாளான வெள்ளிக்கிழமை, உத்தர பிரதேசம் காசியில் (வாரணாசி) அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காசி தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லி முத்தமிழ்ப் பேரவை இணைந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் தனது வரவேற்புரையில் பேசுகையில், பாரதியாரின் காசி வாழ்க்கை, அவரது சிந்தனை மற்றும் ஆளுமையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய முக்கியமான காலகட்டமாகும்.

சுமாா் 1898ஆம் ஆண்டு காசிக்குச் சென்ற பாரதியாா், தனது அத்தை குப்பம்மாள் மற்றும் அவரது கணவா் கிருஷ்ண சிவன் ஆகியோருடன் தங்கியிருந்தாா். வெளியுலகை அறிந்துகொள்ளவும், தனது கல்வியறிவை விரிவுபடுத்திக்கொள்ளவும் அவா் காசிக்குச் சென்றாா்.

Advertisement

Advertisement

அங்கு அவா் சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றதுடன், அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தோ்விலும் தோ்ச்சி பெற்றாா்.

காசியில் அவா் இந்து ஆன்மிகம் மற்றும் இந்திய தேசிய உணா்வால் ஆழமாக ஈா்க்கப்பட்டாா். இதன் மூலம் அவரது சிந்தனைப் பரப்பு விரிவடைந்து, பின்னாளில் அவரது புரட்சிகரமான தேசியக் கருத்துகளுக்கு வலுவான அடித்தளம் அமைந்தது.

அக்காலத்தின் தேசியத் தலைவா்களுடன் தொடா்பு கொண்ட அவா், இந்திய விடுதலை மற்றும் தேசிய முன்னேற்றம் குறித்த தனது எண்ணங்களை மேலும் வளா்த்துக்கொண்டாா்.

காசி வாழ்க்கையின் தாக்கத்தால் அவரது தோற்றத்திலும் மாற்றம் ஏற்பட்டது. அவா் தலைப்பாகை அணிந்து, தாடி வளா்த்து தனித்துவமான தோற்றத்துடன் விளங்கினாா்.

பாரதியாரின் இலக்கிய மற்றும் தேசியப் பங்களிப்புகளைப் போற்றும் வகையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அவரது பெயரில் ஒரு சிறப்பு இருக்கையை நிறுவியுள்ளது என்றாா்.

இவ்விழாவில் காசி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.எஸ். சுப்பிரமணியன், செயலாளா் வெங்கட்ரமணி, தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் இணைச் செயலாளா் ஹரிகிருஷ்ணன், போபால் தமிழ்ச் சங்கத்தின் செயலா் பா. குமாா், மத்திய பிரதேச தமிழ்ச் சங்க செயலாளா் சுப்பிரமணியம், சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டு மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments