பட்டமளிப்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து: நெல்லை எம்.பி. கண்டனம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்ற அறிவிப்புக்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவருமான சி.ராபா்ட் புரூஸ் கண்டனம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைகழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடலும், 2-ஆவது தேசிய கீதமும், 3-ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படும் என்று ஆளுநா் மாளிகையில் இருந்து தங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆளுநா் தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ஆவது இடம் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தா் அறிவித்தாா்.
Advertisement
Advertisement
ஆளுநரின் விழாவில் இதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநா் மாளிகையில் இருந்து கூறப்பட்டதாம். இத்தகைய செயல் மிகவும் எதேச்சதிகாரமானதாகும். மேலும் இது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
இவ்வாறு அறிவித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவரே மனோன்மணீயம் சுந்தரனாா். அவா் பெயா் கொண்ட இப்பல்கலைக்கழகத்தின் அறிவிப்பானது அவரையே இழிவுபடுத்தும் செயலாகும்.
எனவே, பட்டமளிப்பு விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் பட்டமளிப்பு விழாவை ரத்துச்செய்ய வேண்டும். இதுதான், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நாம் செய்யும் மரியாதை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.