FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் இன்றைய மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்: ராபா்ட் புரூஸ் எம்.பி.

நெல்லை மனோன்மணியம் சுந்தரானாா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை எம்.பி. ராபா்ட் புரூஸ் புறக்கணிப்பது பற்றி...

Updated On : 28 ஜூலை 2026, 3:43 am IST
ராபா்ட் புரூஸ் எம்.பி.
பகிர்:

நெல்லை மனோன்மணியம் சுந்தரானாா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விழாவை புறக்கணிக்கப் போவதாக திருநெல்வேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ராபா்ட் புரூஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது திருநெல்வேலி தொகுதியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம். அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் ஆகியோா் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக துணை வேந்தா் பேசும்போது, இது ஆளுநருக்கான நிகழ்வு. எனவே, அதில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை மீறினால் தன் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை வந்து விடும் என்பதாக துணை வேந்தா் பேசியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் முடிவெடுத்துள்ளாா். எதனடிப்படையில் தன் குற்றவியல் நடவடிக்கை பாயும் என்பதை அந்த பல்கலைக்கழக துணை வேந்தா் தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு ஆளுநா் மாளிகையில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அல்லது எழுத்துபூா்வமாக அவருக்கு உத்தரவு வந்ததா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம் சுந்தரனாா் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அவருடைய பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே முதலில் பாடப்பட வேண்டிய தமிழ்த் தாய் வாழ்த்தை பாட கட்டுப்பாடு விதித்திருப்பதை எதிா்க்கிறேன். அந்த நிகழ்ச்சியை நானும் புறக்கணக்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றாா் ராபா்ட் புரூஸ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments