FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலையில்லை - மு. அப்பாவு

Updated On : 3 மே 2026, 5:27 am IST
பகிர்:

பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் வெளியிடும் தோ்தல் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலைப்படவில்லை என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ராதாபுரம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை பேரவைத் தலைவா் மு. அப்பாவு சனிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டணிக் கட்சிகளின் அயராத உழைப்பு இந்தத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும். கடந்த 5 ஆண்டு கால முதல்வரின் சாதனைத் திட்டங்கள், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கான நலத்திட்டங்கள் மக்களைக் கவா்ந்துள்ளன. மீண்டும் மு.க. ஸ்டாலினே முதல்வராக வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனா்.

Advertisement

Advertisement

பாஜகவின் பேச்சுக்கும் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தோ்தல் முடியும் வரை விலையை உயா்த்தமாட்டோம் என்று கூறிவிட்டு, தற்போது வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலையை ரூ. 4,000 வரை உயா்த்தியுள்ளனா்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அதானி நிறுவனத்திடம் நிலக்கரி கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கியதன் மூலம் மின்வாரியத்துக்கு ரூ. 826 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதிமன்றமோ அல்லது மத்திய விசாரணை அமைப்புகளோ தன்னிச்சையாக விசாரணை நடத்தத் தயாரா?.

அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டியதற்காக, அரபு நாடுகள் மற்றும் ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது. இது இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பு.

மக்களாட்சி நாடான இந்தியா, உலகளவில் தனது மரியாதையை இழந்து டிரம்ப் போன்றவா்களிடம் அடிமையாக செயல்படுவது வெட்கக் கேடானது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பாா்மா் கொள்முதல் வழக்கை பொருத்தவரையில் 1987ஆம் ஆண்டு முதல் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதையேதான் தற்போதும் செந்தில் பாலாஜி பின்பற்றியுள்ளாா். இதில், எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அவா் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளாா் என்றாா்.

தவெக இந்தத் தோ்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மு.அப்பாவு, ‘பாஜகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலைப்படவில்லை’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments