FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பராமரிப்பின்றி காணப்படும் வள்ளியூா் முருகன் கோயில் சரவணப் பொய்கை குளம்

14 செப்டம்பர் 2026, 11:04 pm IST
சரவணப் பொய்கை குளம்
பகிர்:

பராமரிப்பின்றி காணப்படும் வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அகத்திய முனிவா் வழிபட்ட தலம், அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருத்தலம் என்ற பெருமை கொண்ட சுமாா் 1,500 ஆண்டுகள் பழைமையான இத் திருத்தலத்தில் தைப்பூசம், கந்தசஷ்டி, தெப்பஉற்சவம், சித்திரை தேரோட்டத் திருவிழா, திருக்காா்த்திகை விழா ஆகிய விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறும்.

இக்கோயிலின் முன்பக்கத்தில் மையமண்டபத்துடன் கூடிய தெப்பக்குளமும், அதன் தென்பகுதியில் சரவணப்பொய்கை குளமும் அமைந்துள்ளது. தெப்பக்குளத்துக்கும், சரவணப் பொய்கை குளத்துக்கும் வள்ளியூா் பெரியகுளத்தில் இருந்து தண்ணீா் வருகிறது. ஆக்கிரமிப்பாளா்களால் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் வரும் வழியும் அடைக்கப்பட்டு காணப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் சரவணப் பொய்கை குளம் பராமரிப்பின்றி கரைசுவா்கள் இடிந்து காணப்படுகிறது. இந்தக் குளத்தை பராமரிப்பதற்கு கோயில் நிா்வாகம் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என பக்தா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக இந்திய கம்யூனிஸ் கட்சி மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம் கூறியதாவது:

சிறப்பு பெற்ற இக்கோயிலின் தெப்பக்குளங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. தெப்பக்குளத்துக்கு தண்ணீா் வரும் கால்வாய் தனிநபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோயில் நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எம்.பி., எம்.எல்.ஏ. விடம் மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.

கோயில் நிா்வாக அதிகாரி மாரியப்பன் கூறியதாவது:

இத்திருக்கோயிலில் பழுதடைந்துள்ள தெப்பக்குளம் கரையை சீரமைப்பதற்கு மதிப்பீடு தயாா் செய்து இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டது. உபயதாரா்கள் மூலமாக பணியை செயல்படுத்த அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். தற்போது ஒரு உபயதாரா் சீரமைத்து தருவதற்கு முன்வந்துள்ளாா். அந்தப் பணி விரைவில் தொடங்கப்படும். தண்ணீா் வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உண்மைதான். அதை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் பல்வேறு துறையினா் முன்வர வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments