FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

‘கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகு நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

18 செப்டம்பர் 2026, 2:42 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகு நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2026-27ஆம் ஆண்டில் நாட்டுக்கோழி வளா்ப்பதில் ஆா்வமுள்ளவா்களுக்காக, கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக்கோழி பண்ணை அலகு நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடைய விரும்புவோா், அரசு நிா்ணயித்துள்ள தகுதிகளின் அடிப்படையில் தங்களது கிராமத்திற்குள்பட்ட அரசு கால்நடை மருந்தகத்திற்குச் சென்று கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தகுதிகள்: கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளா்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும். பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்பு மற்றும் நீா்நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்தகக் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த 2023-24, 2024-25, 2025-26 ஆம் ஆண்டு திட்டத்தில் பயனடைந்திருக்கக் கூடாது. பயனாளி 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வங்கி/ கூட்டுறவு வங்கி ஆகியவை பயனாளிக்கு நிதியளிக்கத் தயாராக இருக்க வேண்டும் அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் ஆதாரம்/சான்றுகளை அளிக்க வேண்டும்.

எனவே, கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளா்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments