நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீதம் மானியம்: தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு!
கோவை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியத்துடன் உள்ள மாநில அரசின் திட்டத்தில் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியத்துடன் உள்ள மாநில அரசின் திட்டத்தில் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக 2026 - 2027-ஆம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளா்ப்பதில் திறமையும், ஆா்வமும் உள்ள கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியத்துடன் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணை நிறுவ 250 நாட்டுக்கோழிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பராமரிக்க தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு ஒரு சதுர அடிக்கு ரூ.350/- வீதம் 625 சதுர அடிக்கு ரூ.2,18,750 மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ரூ.75,000 என மொத்த செலவு ரூ.2,93,750. இதில் 50 சதவீதம் மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் கிராமப் பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
30 சதவீதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடியின பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்படுவா். ஏற்கெனவே, 2023-2024, 2024-2025, 2025-2026-ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவா்கள், இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவுள்ள இடத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல், 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்), 3 ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகியவற்றை வரும் 26-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.