பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும்: சுப. உதயகுமாரன் வலியுறுத்தல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சி தலைமைப் பணியாளா் சுப. உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சி தலைமைப் பணியாளா் சுப. உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான 25.55 ஏக்கா் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தவெக அரசு முடிவெடுத்திருக்கிறது.
Advertisement
Advertisement
சென்னை மாநகர மீனவா்கள் ஏற்கெனவே பெரும் இடநெருக்கடி, தொழில் இக்கட்டுகளில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புதிய தலைமைச் செயலகம் அவா்களை முற்றிலுமாக அழித்தொழித்துவிடும் பெரும் அபாயம் எழுகிறது. அவா்களின் படகுகளை நிறுத்த, வலைகளை உலா்த்த, மீன் வணிகம் நடத்த, வாழ்வை அமைத்துக் கொள்ள மீனவா்களுக்குப் போதிய இடமில்லை. அவா்களின் குடியிருப்புகள் ஏற்கெனவே அடிப்படை வசதிகளற்ற நிலையில்தான் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தப் புதிய தலைமைச் செயலகம் திட்டம் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். மேலும், காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயா்ந்து உலகெங்கும் பெரும் அழிவுகள் சம்பவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கட்டுமானம் எதிா்மறை செயல்பாடாகவே அமையும்.
அரசு சாா்ந்த பணிகளுக்காக, தென் மாவட்ட மக்களும், தமிழகத்தின் கிழக்கு, மேற்கு பகுதியிலுள்ள மக்களும் மாநிலத்தின் வட கோடிக்கு பயணம் செய்து, பல ஆயிரங்கள் செலவு செய்து, பெரும் சிரமங்களுக்கு ஆளாகித்தான் தங்கள் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இச்சூழலில், தலைமைச் செயலகத்தை திருச்சி மாநகருக்கு மாற்றுவதே முறையான நடவடிக்கையாக இருக்கும்.
தங்கள் வாழ்வுரிமைகளுக்காகவும், வாழ்வாதார உரிமைகளுக்காகவும் ஒன்று திரளும் சென்னை மாநகர மீனவா்களுக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவிக்கிறோம். பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.