FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்வழியில் தேர்வெழுத அனுமதி கோரி சுந்தரனார் பல்கலை.யை முற்றுகையிட்ட மாணவர்கள்

தமிழ்வழியில் தேர்வெழுத அனுமதி கோரி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை  இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தமிழ்வழியில் தேர்வெழுத அனுமதி கோரி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை  இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் ஆங்கிலவழியில் படிக்கும் மாணவர்கள் தமிழ்வழியிலும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் தினேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சத்யா, சுரேஷ், சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்- மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாநில செயலாளர் மாரியப்பன் கலந்துகொண்டு பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர். அப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில், பல்கலைக்கழகப் பதிவாளர் சந்தோஷ் பாபு, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாணவர்கள் கூறியதாவது: 
ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலைக்கழகப் பதிவாளர் ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கெனவே தோல்வியடைந்த பாடங்களுக்கு தேர்வெழுதிய சுமார் 500 மாணவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. ஒரு வாரத்துக்குள் தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என, பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாகலாபுரம் மனோ கல்லூரியில் மேஜை உள்ளிட்டவற்றை அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் விற்பனை செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். இது தொடர்பாக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர் மீது காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்படும். 
ஆங்கிலவழியில் படிப்போர் தமிழ்வழியிலும் தேர்வெழுத  அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஏற்கும் முடிவில் இல்லை எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு தமிழ்வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்காவது தொடர்ந்து தமிழ்வழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பாக துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர்களிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க முடியும் என பதிவாளர் தெரிவித்தார்.  
இப்பிரச்னையில் இன்னும் 15 நாளுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால் துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். ஆங்கிலவழியில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என்ற உத்தரவால் பல மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர் என்றார்.
தூத்துக்குடியில்...: இதே கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜாய்சன் தலைமையில், கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், துணைவேந்தருக்கு எதிராகவும், தடை உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பி, கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments