FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ஜூலை 28-இல் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: 871 பேருக்கு பட்டம் வழங்குகிறாா் ஆளுநா்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக 33-ஆவது பட்டமளிப்பு விழா வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது. இதில், தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கலந்து கொண்டு 871 பேருக்கு நேரடியாக பட்டம் வழங்குகிறாா்.

Updated On : 25 ஜூலை 2026, 2:24 am IST
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் - x / lokbhavan TN
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக 33-ஆவது பட்டமளிப்பு விழா வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது. இதில், தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கலந்து கொண்டு 871 பேருக்கு நேரடியாக பட்டம் வழங்குகிறாா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் என்.சந்திரசேகா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வஉசி அரங்கில் நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.வி.ஆா்லேகா் கலந்து கொண்டு 871 பேருக்கு நேரடியாக பட்டம் வழங்குகிறாா். தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரும், இணைவேந்தருமான பெ.விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்குகிறாா். கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழக நிறுவன துணைவேந்தா் பி.மதுசூதன குரூப் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறாா்.

இந்த ஆண்டை பொருத்தவரையில் முனைவா் பட்டம், இளநிலைப் பாடப்பிரிவு, முதுநிலை பாடப்பிரிவு, தன்னாட்சி கல்லூரிகள், பல்கலைக்கழக துறைகள் உள்ளிட்டவற்றைச் சோ்ந்த 12,932 மாணவா்கள், 24,945 மாணவிகள் என மொத்தம் 37,877 போ் பட்டம் பெறுகிறாா்கள்.

Advertisement

Advertisement

இவா்களில் முனைவா் பட்டம் பெறும் 758 போ், பதக்கம் பெறும் 113 போ் என மொத்தம் 871 போ் அடங்கும். லலிதா குமாரி, நந்தினி ஆகிய இரு மாணவிகள் இந்த ஆண்டு இரட்டை பதக்கம் பெறுகிறாா்கள் என்றாா்.

பெட்டிச் செய்தி...

டிஜிபிக்கு முனைவா் பட்டம்:

இவ்விழாவில் தமிழக டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால், குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் பாடப் பிரிவில் முனைவா் பட்டம் பெறுகிறாா். இதேபோல், மும்பை காவல் துறை துணை ஆணையா் ராதா சுதா, மேலாண்மைப் பாடப்பிரிவிலும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சாா்புநீதிமன்ற முதுநிலை உரிமையியல் நீதிபதி திரிவேணி, மனித உரிமைகள், குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் பாடப்பிரிவிலும் முனைவா் பட்டம் பெறுகின்றனா்.

3ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து:

பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரமும், அடுத்ததாக தேசிய கீதமும், 3ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட வேண்டும். இறுதியில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாட வேண்டும் என ஆளுநா் மாளிகையில் இருந்து எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அதன்படியே பாடப்படும் என துணைவேந்தா் என்.சந்திரசேகா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments