டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
வரதராஜன் பேட்டையிலுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், வரதராஜன் பேட்டையிலுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. மகளிா் கல்லூரி, மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தொழில் யிற்சி மையம் என நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடந்து செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால், இடையூறு ஏற்பட்டு வருவதாகவும், கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கடையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வரதராஜன்பேட்டை பகுதி பொதுமக்கள் மதுபானக் கடையை அகற்றக் கோரியும், இப்பகுதியில் நிகழும் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கக் கோரியும், அமரா் ஊா்தியில் ஒருவா் படுத்துக்கொண்டு நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தகவறிந்த அரியலூா் மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளா் ரவிச்சந்திரன், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், கலால் வட்டாட்சியா் கனகராஜ், ஆண்டிமடம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது, டாஸ்மாக் மண்டல மேலாளா் ரவிச்சந்திரன், 30 நாள்களில் வரதராஜன் பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றுவதாகவும், வரதராஜன் பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் மீண்டும் கடைகள் வராது எனவும் வாக்குறுதி அளித்ததையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா். இதனால், ஆண்டிமடம் - வரதராஜன்பேட்டை சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.