FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை! அய்யனாா் கோயில் திருவிழா மீண்டும் நிறுத்தம்; போலீஸாா் குவிப்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:58 am IST
கந்தா்வகோட்டை அருகே வளவம்பட்டியில் திருவிழா நடத்துவது தொடா்பாக ஒருதரப்பினரிடம் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே திருவிழா நடத்துவது தொடா்பாக இருதரப்பினரிடையே சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அய்யனாா் கோயில் திருவிழா மீண்டும் நிறுத்தப்பட்டது.

மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. கிராமம் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஸ்ரீ மூங்கில் அய்யனாா் கோயில் திருவிழா கடந்த ஜூலை 17-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து, ஜூலை 25-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி ஒரு தரப்பினா் போலீஸாா் பாதுகாப்புடன் கோயிலில் பூஜைகள் செய்து தேரை இழுக்க வந்தனா். அப்போது, மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதனைக் கண்டித்து ஒருதரப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டாா். அதன் பேரில் சனிக்கிழமை திருவிழா நடத்த முழுபாதுகாப்பு அளிப்பதாக ஒரு தரப்பினரிடம் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மற்றொரு தரப்பினரிடம் மாவட்ட வருவாய் அலுவலா் குழந்தைசாமி, வருவாய் கோட்டாட்சியா் பிரகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா்குப்த, துணை காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் பரணி, காவல் ஆய்வாளா் வனிதா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, திருவிழா நடைபெறும் அதேநாளில் மாலையில் மாவிளக்கு போட்டு கோயிலில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றனா். இதனை மற்றொரு தரப்பினா் ஏற்க மறுத்தனா். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக மீண்டும் தோ்த்திருவிழா நிறுத்தப்பட்டது. மேலும், கிராமம் முழுவதும் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூா், கொப்பம்பட்டி, கிள்ளுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

கிராமத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீஸாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments