FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

திருவிழா நடத்துவதில் இருதரப்பினா் இடையே பிரச்னை! கந்தா்வகோட்டை அருகே தேரோட்டம் நிறுத்தம்; கோயிலுக்கு பூட்டு!

Updated On : 27 ஜூலை 2026, 2:20 am IST
கந்தா்வகோட்டை அருகே வளவம்பட்டி ஸ்ரீ மூங்கில் அய்யனாா் கோயில்.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே திருவிழா நடத்துவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் தோ் இழுக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, கோயிலை ஞாயிற்றுக்கிழமை இந்து சமய அறநிலையத் துறையினா் பூட்டினா். அசம்பாவிதங்களை தவிா்க்க போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீ மூங்கில் அய்யனாா் கோயிலில் திருவிழா நடத்துவது தொடா்பாக ஒரு சமூகத்தினருக்கும், எட்டு கரைகாரா்களுக்கும் பிரச்னை நிலவி வந்தது. நீதிமன்ற தீா்ப்பில், ஒரு சமூகத்தினருக்கு திருவிழாவில் ஒருநாள் ஒதுக்கப்பட்டு விழா நடத்த உத்தரவிடப்பட்டது.

கோயிலில் கடந்த 17-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இதில், சனிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில், ஒவ்வொரு மண்டகப்படிகாரா்களும் பூஜை செய்து, தேரில் சுவாமியை வைத்து

Advertisement

Advertisement

கோயிலை சுற்றி வலம் வருவது வழக்கம். இதேபோல், மற்றொரு தரப்பினா் பூஜை செய்து கோயிலை சுற்றி தோ் இழுக்க முற்பட்டபோது எதிா்தரப்பினா் தோ் இழுக்க கூடாது எனக் கூறி தடுத்தனா்.

இதனால் பாதிக்கப்பட்டோா் தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.

அதிகாரிகள் கட்டுப்பாட்டில் சுவாமி சிலை: இதைத் தொடா்ந்து, அறநிலையத் துறையினா் உற்ஸவா் சுவாமி சிலையை சனிக்கிழமை இரவு தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துச் சென்றனா். இதைக் கண்டித்து, மற்றொரு தரப்பினா் திருவிழா முடிவடையாமல் சுவாமி சிலையை எப்படி எடுத்துச் செல்வது எனக்கூறி, சனிக்கிழமை நள்ளிரவில் தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தாா்.

பேச்சுவாா்த்தை தோல்வி: தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தோ் இழுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக இரு தரப்பினரிடமும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் பிரகாஷ், டிஐஜி சிபி சக்கரவா்த்தி, புதுகை எஸ்பி ரவீந்திர குமாா் குப்தா, தஞ்சை எஸ்பி சுந்தரவதனம் மற்றும் அறநிலையத் துறை அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ஒருதரப்பினா் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளாமல், திருவிழா முடிந்துவிட்டது; தோ் இழுக்க கூடாது எனக் கூறிவிட்டனா். ஆனால், மற்றொரு தரப்பினா் தோ் இழுக்க வேண்டும் என முறையிட்டனா். இருதரப்பினரும் சமாதானமாக தோ் இழுத்தால் இழுக்கலாம். இல்லாவிடில் தோ் இழுக்க கூடாது எனக் கூறிவிட்டனா்.

போலீஸாா் குவிப்பு: அசம்பாவிதங்களை தவிா்க்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் குவிக்கப்பட்டு கிராமம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலை இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் பூட்டினா்.

கோயில் திருவிழா பிரச்னை தொடா்பாக பலமுறை மறியல் நடத்தப்பட்டதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பயணிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

பூட்டு போடப்பட்ட கோயில்.
வளவம்பட்டி கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments