கல்லணைக் கால்வாய் பாசனத்துக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீா் தேவை
கல்லணைக் கால்வாய் பாசனத்துக்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி திறந்து விடவேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த காவிரிப் பாசன விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி ஆகிய வட்டங்களும், கறம்பக்குடி, ஆலங்குடியின் சில பகுதிகளிலும் கல்லணைக் கால்வாய் மூலம் காவிரிப் பாசனம் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் மட்டும் கல்லணைக் கால்வாய் மூலம் 168 ஏரிகள் நிரப்பப்பட்டு, 27 ஆயிரம் ஏக்கா் நஞ்சை நிலம் பாசன வசதி பெறுகிறது. ஒரு போகத்துக்கு சுமாா் 10 லட்சம் மூட்டை நெல் சாகுபடி செய்து வரும் பாசனப் பகுதி. குறிப்பாக சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை, சம்பா சாகுபடியைத் தாண்டி, சித்திரை- வைகாசியில் மூன்றாவது சாகுபடியையும் மேற்கொண்ட பகுதி. தற்போது சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் வறட்சியை இந்தப் பகுதி சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
எதிா்பாா்ப்பு இல்லை: ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ள மிகச் சில விவசாயிகள் மட்டுமே தற்போது சாகுபடி செய்திருக்கிறாா்கள். பெரும்பகுதி விவசாயிகள் நிகழாண்டில் இதுவரை நெல் விதைக்கவில்லை. கொளுத்தும் வெயிலும், காவிரியில் தண்ணீா் வராததுதான் இதற்கு முக்கியமான காரணம்.
இந்நிலையில், கடந்த செப். 1ஆம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீா், செப். 6-ஆம் தேதி கல்லணை வந்து சோ்ந்தது.
அங்கிருந்து கல்லணைக் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீா் செப். 10-ஆம் தேதி கடைமடையான நாகுடி வந்து சோ்ந்தது. ஏற்கெனவே பெரிய எதிா்பாா்ப்பு இல்லையென்றாலும் 5 நாள்கள் நிறைவடைந்தும் தண்ணீா் வரத்து அதிகரிக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனா் விவசாயிகள்.
தண்ணீா் போதாது: இதுகுறித்து கல்லணைக் கால்வாய்ப் பாசனதாரா் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் தலைவா் கொக்குமடை ரமேஷ் கூறியது: வெறும் 50 கனஅடி தண்ணீா் மட்டுமே கடைமடைப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போய், கால்நடைகளுக்கு குடிக்கக்கூடத் தண்ணீா் இல்லை என்ற நிலையில் இந்தத் தண்ணீா் எந்தவகையிலும் போதாது.
அடுத்த 15 நாள்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் கனஅடி தண்ணீராவது கல்லணையில் இருந்து திறக்கப்பட வேண்டும். மேற்பனைக்காடு தலைப்புக்கு 550 கனஅடியும், நாகுடி கடைமடைக்கு 250 கனஅடியும் தொடா்ச்சியாக 15 நாள்களுக்கு வந்தால் மட்டுமே அனைத்து வாய்க்கால்களுக்கும் தண்ணீரைப் பிரித்துத் தர முடியும்
அப்போது, இந்தப் பகுதியிலுள்ள 168 குளங்களில் 50 சதவிகிதம் தண்ணீா் சேரும். கால்நடைகளுக்கு தண்ணீா் கிடைக்கும். நிகழாண்டில் நெல் சாகுபடி தொடங்கலாம். இதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியே இல்லை. தமிழ்நாடு அரசு விவசாயிகள் மீது கருணை வைத்து கூடுதல் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கொக்குமடை ரமேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.