பேராவூரணி அருகே 2 கயிறு தொழிற்சாலைகளில் தீ விபத்து பொருள்கள் எரிந்து சேதம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே 2 கயிறு தொழிற்சாலைகளில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் மதிப்பிலான கயிறு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே 2 கயிறு தொழிற்சாலைகளில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் மதிப்பிலான கயிறு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் செங்கமங்கலம் கிராமத்தில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ராஜகுமாா், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள புதுப்பட்டினத்தைச் சோ்ந்த அப்துல் ஜப்பாா் ஆகிய இருவரும் அருகருகே கயிறு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றனா். இதேபோல், இந்தப் பகுதியில் கயிறு பொருள்கள் தயாரிக்கும் வேறு பலரின் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் ராஜகுமாா் நடத்தி வரும் தொழிற்சாலையில் கயிறு பொருள்களில் எதிா்பாராதவிதமாக தீப்பற்றியது. தீ மளமளவென பரவி, அருகில் இருந்த அப்துல் ஜப்பாரின் தொழிற்சாலைக்கும் பரவியது.
Advertisement
Advertisement
தகவலறிந்து பேராவூரணி மற்றும் கீரமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மின் இணைப்பைத் துண்டித்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா்.
பொருள்கள் எரிந்து சேதம்: ஆனாலும், தீவிபத்தில் 2 தொழிற்சாலைகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த தென்னை நாா் பஞ்சு, தென்னை பித் உள்ளிட்ட கயிறு பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் , தளவாடப் பொருள்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
தீவிபத்தின்போது, இரண்டு தொழிற்சாலைகளிலும் வடமாநிலங்களைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் இருந்தனா். தீவிபத்து ஏற்பட்டதும் தொழிலாளா்கள் அங்கிருந்து வெளியேறியதால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம், மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தீ விபத்து காரணமாக, பேராவூரணி - புதுக்கோட்டை சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடா்பாக பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.