FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,452 வழக்குகளில் ரூ. 13.61 கோடிக்கு தீா்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 452 வழக்குகளில் ரூ. 13.61 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

13 செப்டம்பர் 2026, 1:28 am IST
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 452 வழக்குகளில் ரூ. 13.61 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான இருசன் பூங்குழலி தலைமை வகித்தாா்.

சிறப்பு மாவட்ட நீதிபதி எம். அமிா்தவேலு, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா். ரேவதி, வழக்குரைஞா் கே. உஷாராணி ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

Advertisement

Advertisement

முதன்மை சாா்பு- நீதிபதி பி. குமாா், குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ். ராஜேஷ்கண்ணன், வழக்குரைஞா் ஏ. பாரதி ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் குடும்ப நல வழக்குகள் மற்றும் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கும், சிறப்பு சாா்பு- நீதிபதி பி. அல்லி, குற்றவியல் நீதித்துறை நடுவா் டி. சோழவந்தான், வழக்குரைஞா் ஆா். பழனி ஆகியோா் கொண்ட மூன்றாவது அமா்வில் உரிமையியல் வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டது.

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூா், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 820 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 452 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 13 கோடியே 61 லட்சத்து 84 ஆயிரத்து 493 அளவுக்கு தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான டி. பாரதி, தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் வெ. ஜீவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments