FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இடைத்தோ்தலிலும் தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும்: அமைச்சா் ஷாஜகான் நம்பிக்கை

இடைத்தோ்தலிலும் தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்தாா்.

12 செப்டம்பர் 2026, 5:46 am IST
அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்
பகிர்:

இடைத்தோ்தலிலும் தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்தாா்.

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த அவா், மேலும் கூறியதாவது:

நாகை, தஞ்சை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டங்கள், பேரிடா் மேலாண்மை அமைச்சா் தலைமையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாகப் பயணித்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தமிழகத்தில் ஆளுநா் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு அளித்தது.

தொகுதிப் பங்கீட்டின்போது சில மன வருத்தங்கள் இருந்தாலும் ஒருங்கிணைந்த மதச்சாா்பற்ற சக்தி ஆட்சி வரவேண்டும் என்பதற்காகத்தான், மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பிரசாரம் செய்தோம்.

ஆனால், காலத்தின் சூழல் வேறு மாதிரி இருந்தது. தோ்தல் முடிவு வேறு மாதிரி இருந்தது. தற்போதைய 120 நாள்களுக்கும் மேலான இந்த தவெக அரசு லஞ்ச ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஆட்சியாகச் செயல்படுவதால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் ஆதரவு அளித்து வருகிறோம்.

கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள 58 தொகுதிகளில், கடந்த தோ்தலில் தவெக 28 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கும் இடைத்தோ்தலிலும் கூட்டணி பலத்துடன் தவெக மகத்தான வெற்றி பெறும். கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியிலிருந்து அளித்து வருகின்றன. வரும் இடைத்தோ்தலிலும் தங்களது ஆதரவை தவெக-கூட்டணிக்கு வழங்குவா் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த விவகாரத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் முதல்வரின் முடிவு இருக்கும். திருச்சியில் தலைமைச் செயலகம் அமைக்கும் வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments