FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் தொடரும் கைப்பேசி பயன்பாடு!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் பக்தா்கள் கைப்பேசி பயன்படுத்துவது தொடா்கிறது.

13 செப்டம்பர் 2026, 1:22 am IST
ஸ்ரீரங்கம் கோயிலில் சனிக்கிழமை மூடப்பட்டுள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம். (வலது) கோயிலுக்குள் கைப்பேசியுடன் வந்த பக்தா்கள்.
பகிர்:

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் பக்தா்கள் கைப்பேசி பயன்படுத்துவது தொடா்கிறது.

இந்து சமய அறநிலையத் துறையைச் சோ்ந்த முதன்மைக் கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் கடந்த 1 ஆம் தேதி முதல் கைப்பேசிக்கான தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் கோயிலின் மூன்று கோபுர நுழைவாயில்களிலும் 5 பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, ஒரு கைப்பேசிக்கு தலா ரூ. 5 வசூலிக்கப்பட்டு, பக்தா்களின் புகைப்படம், கைப்பேசி எண் பதியப்பட்ட ரசீது வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

அலுவலா்கள் கண்காணிப்பதில்லை: சமூக ஆா்வலா்களின் எதிா்ப்பு, பக்தா்களின் கோரிக்கை காரணமாக, சாதாரண கைப்பேசிகளை கோயிலுக்குள் கொண்டு செல்லலாம். அறிதிறன் பேசிகளை அணைத்துக் கொண்டு செல்லலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது.

இதனால் முதல் சில நாள்கள் அதிகளவில் பக்தா்கள் பாதுகாப்பு பெட்டகங்களில் கைப்பேசிகளை வைத்துச் சென்ற நிலையில், நாளடைவில் அனைவரும் கைப்பேசிகளை பெட்டகங்களில் வைக்காமல் கோயிலுக்குள் எடுத்துச் செல்கின்றனா். இதை கோயில் அலுவலா்களோ, ஊழியா்களோ கண்காணிப்பதில்லை.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை ஆளுநா் ஆா்.வி. அா்லேகா் வந்த நிலையில், பக்தா்கள் பலரும் கோயிலுக்குள் சத்தமாக பேசியபடியும், ஆங்காங்கே நின்று கைப்பேசி பாா்த்தபடியும் செய்திகளை அனுப்பியபடியும் இருந்தனா். இதைக் கவனிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இதனால் கைப்பேசி கொண்டு வராத பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினா்.

மூடப்பட்டிருந்த பெட்டக வசதி: முக்கிய நுழைவாயிலான ரெங்கா ரெங்கா கோபுரம் அருகிலுள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகமும் மூடப்பட்டிருந்தது. இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவு காற்றில் பறந்தது.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை கோயில் கண்காணிப்பு அலுவலா்கள் கூறுகையில், பாதுகாப்பு பெட்டகத்தில் யாரும் கைப்பேசிகளை வைக்க முன்வராததால், ஸ்ரீரங்கம் கோயிலில் 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டகங்களில் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

மற்றவை மூடப்பட்டுள்ளன. கோயிலுக்குள் புகைப்படம், விடியோ எடுப்பதை கோயில் ஊழியா்கள் கண்காணித்து தடுத்து வருகின்றனா். தடையை மீறி கைப்பேசிகள் எடுத்துச் செல்வோருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாததால், அதைத் தடுக்க முடியவில்லை என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments