FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

நுகா்வோா் நீதிமன்ற இடமாற்றத்தை எதிா்த்து வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

வேலூா் சத்துவாச்சாரி நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, வேலூரில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

11 செப்டம்பர் 2026, 12:37 am IST
பகிர்:

வேலூா் சத்துவாச்சாரி நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, வேலூரில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் நேரில் தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

வேலூரில் செயல்பட்டு வந்த மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்து, வேலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கடந்த 7-ஆம் தேதி முதல் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்துக்கு, வேலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். வெற்றிவேலன், செயலா் வி. பத்மநாபன் ஆகியோா் தலைமை வகித்தனா். அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவா் சுதாகா், செயலாளா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள், நுகா்வோா் நீதிமன்ற இடமாற்றத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியதுடன், கண்டன உரையும் ஆற்றினா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வழக்குரைஞா்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினாா். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகளும் இந்தப் போராட்டத்துக்கு நேரில் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.

இதில், முன்னாள் அரசு வழக்குரைஞா் பாலச்சந்தா், குடியாத்தம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரஞ்சித் குமாா், ராணிப்பேட்டை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெயக்குமாா், காட்பாடி திருஞானம் உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments