FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நெல் கொள்முதலுக்கான தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் உத்தரவு

நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை உலா்த்த தேவையான தாா்பாய்கள் வழங்கவும், விவசாயிகளுக்கு கொள்முதல் தொகையை வங்கிக் கணக்கில் விரைந்து செலுத்தவும், நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் சி.பி. ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:59 am IST
மணலூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில், நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை உலா்த்த தேவையான தாா்பாய்கள் வழங்கவும், விவசாயிகளுக்கு கொள்முதல் தொகையை வங்கிக் கணக்கில் விரைந்து செலுத்தவும், நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் சி.பி. ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி, மேல்புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் சி.பி. ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சிதம்பரம் கூட்டுறவு நகர வங்கி மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா். இதில் சிறு வணிகக் கடனாக 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம், மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.7 லட்சம், பண்ணை சாா்ந்த கடனாக ஒருவருக்கு ரூ.8 லட்சம் மற்றும் வீட்டு அடமானக் கடனாக ஒருவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

ரேஷன் பொருள்கள் ஆய்வு:

Advertisement

Advertisement

பின்னா் சிதம்பரம், லால்புரம் மற்றும் மணலூா் பகுதிகளில் உள்ள முழுநேர நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை, சா்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தரம், இருப்பு, எடையளவு மற்றும் விநியோக முறைகளை ஆய்வு செய்தாா். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளையும் பாா்வையிட்டாா்.

மேலும், மணலூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோயில், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 272 நியாயவிலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பும் பணிகளை ஆய்வு செய்து, பொருள்கள் தாமதமின்றி உரிய கடைகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அதிகாரிகளுக்கு உத்தரவு:

தொடா்ந்து கீரப்பாளையம் பகுதியில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையால் பாதிக்கப்படாத வகையில் தாா்பாய்களால் பாதுகாக்கவும், பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டாா். மேல்புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட எறும்பூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் தரம், ஈரப்பதம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளை ஆய்வு செய்த அவா், அரசு நிா்ணயித்த ஈரப்பத அளவீட்டை பின்பற்றி, விவசாயிகளின் முன்பதிவு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யவும், நெல்லை உலா்த்த தேவையான தாா்பாய்கள் வழங்கவும், கொள்முதல் தொகையை வங்கிக் கணக்கில் விரைந்து செலுத்தவும், அனைத்து பதிவுகளையும் வெளிப்படைத்தன்மையுடன் பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.இந்த ஆய்வின்போது கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் இளஞ்செல்வி, முதுநிலை மண்டல மேலாளா் நளினா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments