தொடா்ந்து 4-ஆவது முறையாக கடலூா் தலைமை அஞ்சலகம், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அலுவலகங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இது, கடந்த மே மாதத்திலிருந்து தொடா்ந்து 4-ஆவது முறையாக விடுக்கப்படும் மிரட்டலாகும்.
திருச்சி மண்டல தலைமை அஞ்சலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து கடலூா் கோட்ட அஞ்சல கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில், கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து போலீஸாா், வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் நிபுணா்கள் வியாழக்கிழமை பிற்பகல் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகத்துக்கு விரைந்தனா்.
Advertisement
Advertisement
அங்கு பணியிலிருந்த ஊழியா்கள், அலுவலா்கள் மற்றும் அஞ்சலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, மெட்டல் டிடெக்டா் கருவி, மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து, அருகே உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைகளில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
முன்னதாக, திருச்சி மண்டல தலைமை அஞ்சலகத்துக்கு கடந்த மாா்ச் மாதத்தில் மூன்று முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சல்களில், அஞ்சலகங்கள், கடவுச்சீட்டு அலுவலகங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, திருச்சி மண்டல கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள், கடவுச்சீட்டு அலுவலகங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவித வெடிபொருளும் கண்டறியப்படாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. இந்த நிலையில், தற்போது 4-ஆவது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.