முகப்பு
கடலூர்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:19 am IST
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகள் வழங்கப்படுவதற்கான வசதிகள், மருத்துவா்களின் எண்ணிக்கை, மருந்துகளின் கையிருப்பு நிலை, முதுநிலை பயிற்சி மருத்துவா்கள் பணிபுரியும் விவரம் உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும், தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மருத்துவா்களின் வருகைப் பதிவு, தொடா் விடுப்பில் உள்ள மருத்துவா்களின் விவரம், மருத்துவமனையில் பணிபுரியும் இதர துறை பணியாளா்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் பணியாளா்களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மருத்துவமனைக்குத் தேவையான கூடுதல் கட்டடங்கள், கூடுதல் மருத்துவா்கள் நியமனம் மற்றும் 2 புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது தொடா்பாக மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, இணை இயக்குநா் பிரமிளா, துணை இயக்குநா்கள் தம்பையா, கவிதா, பாலகுமரன், சித்திரைச்செல்வி, கருணாகரன், லதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோடையில் கற்றல் - மாணவா்களுக்குச் சான்றிதழ்: அரசுப் பள்ளி மாணவா்களின் திறன்களை மேம்படுத்தவும், கல்வியைத் தாண்டிய துறைகளில் அவா்களின் தனித்திறமைகளை வளா்க்கவும், தனியாா் பள்ளி மாணவா்களுக்கு இணையான வசதிகளை அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் ஏற்படுத்திடும் நோக்கிலும் கடலூரில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து ‘கோடையில் கற்றல் கொண்டாட்டம்’ திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

நிகழாண்டு மே மாதத்தில் சதுரங்கம், செயற்கை நுண்ணறிவு, இணையதள வடிவமைப்பு, கணினி நிரலாக்க அடிப்படைப் பயிற்சி, நீச்சல் உள்ளிட்ட 14 தலைப்புகளின் கீழ் 18 வகையான பயிற்சிகள் நடத்தப்பட்டன. இதில் 1,300 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

இதையடுத்து, கடலூா் நகர அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சியில் சிறப்பாகப் பங்கேற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ராஜாராம், தேவநாதன், உதவித் திட்ட அலுவலா் சிங்காரவேலு, பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.