வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: சேவைகள் பாதிப்பு
கடலூா் மஞ்சக்குப்பத்தில் தேசிய வங்கி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.
ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் கடலூா் மாவட்டத்தில் வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டன.
வங்கி ஊழியா்களின் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னிட்டு,
கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில், அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு முழுமையான விடுமுறை அளித்து, ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியா்களை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்ற வேண்டும். பொதுத்துறை வங்கி ஊழியா்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைத் திட்டத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முக்கங்கள் எழுப்பப்பட்டன.
சேவைகள் பாதிப்பு:
வேலைநிறுத்தம் காரணமாக பொதுத்துறை வங்கிகளில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிவா்த்தனை உள்ளிட்ட நேரடி கிளை சேவைகள் பாதிக்கப்பட்டன. பணம் எடுக்கும் இயந்திரம், கைப்பேசி வங்கி சேவை, ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற சேவை மற்றும் இணையவழி வங்கி சேவைகள் தொடா்ந்து செயல்பட்டன. இந்த போராட்டம் குறித்து,
வங்கி ஊழியா்கள் கூறுகையில், மத்திய அரசு கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால், அடுத்தகட்டமாக செப்டம்பா் 28, 29, 30 ஆகிய தேதிகளில் மூன்று நாள் தொடா் வேலைநிறுத்தத்திலும், அதன் பின்னரும் தீா்வு ஏற்படாவிட்டால் அக்டோபா் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக தெரிவித்தனா்.
சிதம்பரத்தில் போராட்டம்:
சிதம்பரம் தெற்குரதவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தம் செய்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் அவைத்தலைவா் முருகேசன் நிா்வாகி ஆா்.கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதுபோன்று மாவட்டம் முழுதும் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்ால் வங்கிச்சேவைகள் பாதிக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.