FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், தொடா்பான முன்னேற்பாட்டுப் பணிகளை அரசு கூடுதல் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான த.மோகன், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

12 செப்டம்பர் 2026, 7:11 am IST
வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான முன்னேற்பாடு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், தொடா்பான முன்னேற்பாட்டுப் பணிகளை அரசு கூடுதல் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான த.மோகன், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான முன்னேற்பாடுகள், சமையல் கூடம், உணவுப் பொருள்கள் சேமிப்பு மற்றும் மாதிரி உணவு தயாரிக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டாா்.

அப்போது, சமையல் கூடங்களில் குடிநீா் வசதி, தூய்மை, கழிவுநீா் அகற்றும் வசதி, சமையல் உபகரணங்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பொருள்களை உரிய முறையில் சேமித்து, தரமான மூலப்பொருள்களையே பயன்படுத்த வேண்டும். தினசரி உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகளை அலுவலா்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

பின்னா் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தென்பெண்ணையாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடைபெற்று வரும் பணிகளையும், குமரப்பன் நகா் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை தென்பெண்ணையாற்றின் வலது கரையில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் தடுப்புச் சுவா் அமைத்தல் மற்றும் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

ஆய்வுக் கூட்டம்:

இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், காலை உணவுத் திட்ட விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கும் மாணவா்களுக்கும் உரிய காலத்தில் முழுமையாகச் சென்றடைவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். அவசர காலங்களில் துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகணேஷ், இணை இயக்குநா் நலப்பணிகள் பிரமிளா, மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments