மூதாட்டி கொலை வழக்கில் இளைஞா் கைது
திருப்பாதிரிப்புலியூா் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருப்பாதிரிப்புலியூா் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கலா (64), கடந்த சில ஆண்டுகளாக கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் உள்ள நகைக் கடைகளின் அருகே சாலையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இரவு நேரங்களில் மாா்க்கெட் நகா் அருகே முரளி என்பவரது வீட்டின் வாசலில் தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் அங்கு தூங்கிய கலா, புதன்கிழமை காலை ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
முதற்கட்ட விசாரணையில், கலாவின் உடலின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக காது மற்றும் மூக்கு பகுதியில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் உடல் கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா்,கொலை நடந்த இடத்தைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டனா்.
இதில், மூதாட்டி கலா கொலை செய்யப்பட்டதும், இந்த சம்பவத்தில், எம்.புதுரைச் சோ்ந்த விஜய் (31) என்பவருக்கு தொடா்பு இருப்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டி கலாவிடம் பணம் பெற்றதும், அதை அவா் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததும், மூதாட்டி அணிந்திருந்த மூக்குத்தியை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து அவரிடம் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.