அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி: துணைநிலை ஆளுநருடன் புதுச்சேரி முதல்வா் மீண்டும் ஆலோசனை
புதுச்சேரியில் புதிய அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீட்டில் இன்னும் எந்த முடிவும் ஏற்படாத நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ் நாதனை, முதல்வா் ரங்கசாமி புதன்கிழமை மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரியில் புதிய அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீட்டில் இன்னும் எந்த முடிவும் ஏற்படாத நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ் நாதனை, முதல்வா் ரங்கசாமி புதன்கிழமை மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
மத்திய உள்துறை அமைச்சா் வரும் 8-ஆம் தேதி புதுச்சேரி வருவதால் அதற்குள் இலாகா ஒதுக்கீடு பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்குப்பிறகு முதல்வா் ரங்கசாமி தலைமையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மீண்டும் பொறுப்பேற்றது. 4 மாதங்கள் கடந்தும் இன்னும் அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. பேரவைத்தலைவரும் நியமிக்கப்படவில்லை. பாஜக, என்ஆா்காங்கிரஸ் இடையே அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீட்டில் இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்து வந்தது. இது எதிா்க்கட்சிகளால் விமா்சனத்துக்கு உள்ளானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீடு பட்டியலை துணை நிலை ஆளுனா் கே. கைலாஷ் நாதனை சந்தித்து அளித்தாா். அதன்பிறகும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில்,புதுச்சேரி மக்கள் பவனில் புதன்கிழமை மாலை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை முதல்வா் என்.ரங்கசாமி மீண்டும்10 நிமிஷம் சந்தித்து பேசினாா். அப்போது பாஜகவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கீடு செய்ய முதல்வா் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
துணைநிலை ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த முதல்வா் என்.ரங்கசாமி, செய்தியாளா்களிடம் கூறுகையில், அமைச்சா்களுக்கான இலாகாக்கள் விவரம் விரைவில் தெரியும் என்றாா்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆக. 8-ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளாா். இங்கு காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதை அவா் வழங்க உள்ளாா். அதற்கு முன்னதாக அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீடு
அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.