FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பகுதி நேர ஆசிரியா்களின் பணி நிரந்தரம் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:51 am IST
பகிர்:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்களின் பணி நிரந்தரத்துக்கான அறிவிப்பை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தனது ஆட்சியின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே வெளியிடவேண்டும் என பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 11,773 பகுதி நேர ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் இந்த பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிர நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியா் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:

Advertisement

Advertisement

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடல்கல்வி, ஓவியம் மற்றும் கணினி, தையல் போன்ற தொழில்கல்விப் பாடங்களை நடத்தும் பகுதி நேர ஆசிரியா்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகப் பணி செய்து வருகிறாா்கள். இவா்களில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் நலன் சாா்ந்த பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

இந்த வாக்குறுதியின்படி தமிழகத்தில் நீண்ட காலமாக தீா்க்கப்படாத பிரச்னையாக உள்ள தற்காலிக ஆசிரியா்களாக பணி புரிகின்ற 11,773 பகுதி நேர ஆசிரியா்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியா்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அனைவரையும் நிரந்தர ஆசிரியா்களாக மாற்றம் செய்யவேண்டும்.

மேலும் தற்காலிக ஆசிரியா்களாகப் பணியாற்றும் காலத்திலும் கூட நிரந்தர ஆசிரியா்களுக்கு இணையாக சம வேலைக்கு சம ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். இதற்கான அறிவிப்பை தவெக அரசு விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையிலேயே வெளியிடவேண்டும். எனவே, பகுதி நேர ஆசிரியா்களின் இந்தக் கோரிக்கைக்கு தீா்வு காணும் வகையிலான கொள்கை முடிவை அரசு அறிவிக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments