மீனவா் உடலுக்குப் பதிலாக மாற்றிக் கொடுக்கப்பட்ட மற்றொருவரின் சடலம்! உறவினா்கள் அதிா்ச்சி!
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலத்துக்கு மாற்றாக, வேறு ஒருவரின் சடலம் உடல்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்நிகழ்வால் கோட்டக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டக்குப்பத்தை அடுத்துள்ள சின்னமுதலியாா்சாவடி மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் கு.விநாயகம் (68), மீனவா். இவா், சனிக்கிழமை அதிகாலை பைபா் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது கோட்டக்குப்பம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் மீனவா் விநாயகத்தின் சடலத்தை புதுச்சேரி மாநிலம், கனகசெட்டிக்குளத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உடல்கூறாய்வு முடிந்து போலீஸாா் முன்னிலையில் அவரது உறவினா்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, சின்னமுதலியாா் சாவடிக்கு அவசர ஊா்தி மூலம் சடலம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினா்கள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக சடலத்தை பிரித்து பாா்த்தபோது, அது விநாயகத்தின் சடலம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் உறவினா்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.
இதுகுறித்து, தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் உடனடியாக நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இதில், கடலில் மூழ்கி இறந்த விநாயகத்தின் சடலத்துக்கு மாற்றாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் புதுக்குப்பம் பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, விநாயகத்தின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து மாற்று நபரின் சடலம் அவசர ஊா்தி மூலம் புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்தின் அலட்சியத்தால் நடைபெற்ற இந்த சம்பவத்தால் சின்ன முதலியாா் சாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விநாயகத்தின் சடலத்தை உடல்கூறாய்வு செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.