மக்கள் வாழ்வியலைக் கேஜிஎஃப் பேசவில்லை: பா.இரஞ்சித்
கேஜிஎஃப் திரைப்படம் கோலார் தங்கச் சுரங்க மக்களின் வாழ்வியலை பேசவில்லை என இயக்குநர் பா.இரஞ்சித் கூறியுள்ளார்.
நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதற்காக, படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் குறித்து பேசிய பா.இரஞ்சித், “கேஜிஎஃப் திரைப்படத்திற்கு முன்பே கோலார் தங்கச் சுரங்கத்தைப் பற்றி படித்து, அதைப் படமாக்கும் முயற்சியில் இருந்தேன். கேஜிஎஃப் படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலரில் சுரங்கத்தில் மக்கள் துயரப்படும் காட்சிகள் இருந்தன. நாம் யோசித்ததை யாரோ எடுத்துவிட்டார்கள் என நினைத்தேன்.
ஆனால், படம் வெளியானதும்தான் தெரிந்தது. அப்படம், கோலார் தங்கச் சுரங்கத்தில் மக்கள் சந்தித்ததையும் அவர்களின் வாழ்வியலையும் ஒரு சதவீதம் கூட பேசவில்லை. ஒரு சினிமாவாக மக்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால், வரலாறாக அப்படத்தில் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.