நடிகர் விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்: விக்னேஷ் சிவன்
விஜய் குறித்து விக்னேஷ் சிவன்...
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, நானும் ரௌடிதான் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
அடுத்தடுத்து சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால், இவை இரண்டும் கலவையான விமர்சனங்களையே பெற்றன.
Advertisement
தற்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் டீசர், டிரைலர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பால் படக்குழு நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விக்னேஷ் சிவனிடம், “போடா போடி திரைப்படம் சரியான வரவேற்பைப் பெறாததற்குக் காரணம் என்ன?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு விக்னேஷ் சிவன், “போடா போடி திரைப்படத்தின் இயக்குநராக நான் ஒப்பந்தமானபோது எனக்கு 22 வயது. ஆனால், அப்படம் வெளியாகும்போது 27 ஆகிவிட்டது. அதுவரை ஏதாவது ஒரு தாமதம் நடந்துகொண்டே இருந்தது. இறுதியாக, நடிகர் விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்துடன் போடா போடி வெளியானது. அங்கேயே படம் முடிந்துவிட்டது. அந்த மாபெரும் பிளாக்பஸ்டர் முன் போடா போடியால் நிற்க முடியவில்லை.
துப்பாக்கி திரைப்படத்தின் இடைவேளையில் நடிகர் விஜய் 12 நபர்களைச் சுட்டுக்கொல்வார். ஆனால், உண்மையில் அவர் சுட்டது 13 பேரை. அன்று அவர் சுட்ட 13-வது ஆள் நான்தான்” என்றார்.