ஜன நாயகன் படத்தை வெளியிட மாட்டோம்! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு!
ஜன நாயகன் படம் தொடர்பாக தமிழ் ராக்கர்ஸின் அறிவிப்பு பற்றி...
ஜன நாயகன் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக தங்களின் வலைதளத்தில் வெளியிட மாட்டோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.
எச். வினோத் இயக்கிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னை காரணமாக வெளியாகவில்லை.
தேர்தல் நிறைவடைந்தவுடன் மே மாதத்தில் திரையரங்குகளில் ஜன நாயகன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக மர்ம நபர்களால் இன்று அதிகாலை இணையத்தில் கசிந்துள்ளது.
Advertisement
இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், திரைப்படங்கள், இணையத் தொடர்கள் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், ஜன நாயகன் படத்தை வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் அரசால் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு பெயர்களில் வலைதளங்களை தொடங்கி திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அவற்றில் ஒரு வலைதளமான தமிழ் எம்வி-யில், “விஜய்யைச் சுற்றி நிலவும் அரசியல் சார்ந்த விவகாரங்களை நாங்கள் நன்கு அறிவோம். எங்கள் நெறிமுறைகளின்படி, ஒரு திரைப்படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியான பின்னரே நாங்கள் அதனை வெளியிடுவோம். எனவே, இப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பாக இங்கு பதிவேற்றம் செய்யப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜன நாயகன் திரைப்படத்தை வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்வது, பதிவேற்றம், பதிவிறக்கம் செய்வது குற்றமாகும். அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.