விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எனக்கு புதிய அடையாளமாக இருக்கும்: நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்...
நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியவை கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 2) கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, ”இசை வெளியீட்டு விழாவைத் திருவிழா போல் மாற்றி வைத்திருக்கிறீர்கள். என் பிறந்த நாளை இந்த முறை ஒரு காரணத்திற்காகக் கொண்டாடவில்லை. ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பார்த்தேன். 5000 பேர் ரத்த தானம் கொடுத்திருக்கிறீர்கள்; முடிந்த உதவிகளைச் செய்தீர்கள். கருப்பு திரைப்படத்திற்குப் பின் இப்போதுதான் உங்களைப் பார்க்கிறேன். இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்ததற்காக உங்களைக் கட்டி அரவணைக்கிறேன். விரைவில், கருப்பு 100-வது நாளையும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நல்ல படமாக உருவாகியுள்ளது. நீண்ட காலம் கழித்து எனக்கு புதிய அடையாளமாக இப்படம் இருக்கும் என நினைக்கிறேன். நான் செய்ய வேண்டிய கதாபாத்திரமாக இருந்தது. மூன்று பெண்களின் குணங்களை எழுதிய விதமாகட்டும் உறவுகளின் மேன்மையைப் பேசியதாக இருக்கட்டும் இப்படம் அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் வெங்கட் அட்லுரி எழுத்தின் மீது மரியாதை உண்டு. இப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களுக்குமானது.
இந்த ரசிகர்களால்தான் கடந்த 28 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். நான் எங்கே ஆரம்பித்தேன்? எங்கு வந்திருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன். நான் பெற்ற வெற்றியைவிட நீங்கள் அனைவரும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். எது இல்லையென்றாலும் நம்பிக்கை இருந்தால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம். உங்களின் அன்பு கிடைத்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Suriya's remarks at the audio launch event of the film Viswanath & Sons have garnered attention.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.