குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ: வனத்துறை அதிகாரிகள் விசாரணை!
நடிகர் விக்ரம் வெளிநாட்டு குரங்குடன் வெளியிட்ட விடியோ சர்ச்சையான நிலையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விக்ரம் வெளிநாட்டு குரங்குடன் வெளியிட்ட விடியோ சர்ச்சையான நிலையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு நாள்களுக்கு முன் குரங்குடன் விளையாடும் விடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
லார் கிப்பன் என்ற வகை குரங்கான அது சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்டதா? அந்தக் குரங்கை வளர்க்க அனுமதி பெறப்பட்டதா? என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த விடியோவை விக்ரம் நீக்கினார்.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் நடக்கும் சட்டவிடோத அயல்நாட்டு வனவிலங்குகள் வர்த்தகம் மற்றும் இடமாற்றம் தொடர்பான கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு அந்தக் குரங்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறையான அனுமதி பெறப்பட்டதா?
லார் கிப்பன் வகை குரங்குகள் சர்வதேச அளவில் அழியும் அபாயத்தில் உள்ள உயிரினங்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தின் கீழ் (Appendix I) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
Appendix I பட்டியலில் உள்ள உயிரினங்களை சர்வதேச அளவில் வணிகப் பயன்பாட்டுக்கான விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடமாற்றம் செய்ய கடுமையான நிபந்தனைகள் உண்டு.
அதில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளுன் அனுமதிகள், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் ஆவணங்கள் மற்றும் மாநில தலைமை வனவிலங்கு காப்பாளரின் அனுமதி போன்றவை இல்லாமல் இந்த விலங்குகளை வைத்திருக்க முடியாது.
இது தொடர்பாக, முதன்மை வனவிலங்கு காப்பாளர் ராகேஷ் குமார் தோக்ரா கூறுகையில், குறிப்பிட்ட லார் கிப்பன் வகை குரங்கு எவ்வாறு சென்னை கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும், அதனை வைத்திருக்கத் தேவையான அனைத்து சட்டரீதியான விதிமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றியும் வனத்துறை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.
எங்கிருந்து வந்தது?
ஆவணங்களின்படி, மணிப்பூரைச் சேர்ந்த லைகுரம் சிங் என்பவர் 2020 ஆம் ஆண்டில் 'பரிவேஷ் 1' என்ற தளம் மூலம் 8 லார் கிப்பன்கள் (4 ஆண், 4 பெண்) தன்னிடம் இருப்பதாகப் பதிவு செய்துள்ளார். அவற்றின் பூர்வீகம் மலேசியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர், 'உயிருள்ள விலங்கு இனங்கள் (அறிக்கை மற்றும் பதிவு) விதிகள் 2024'-ன் படி, படிவம்-I மூலம் லைகுரம் சிங்கிடமிருந்து ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதன் என்பவருக்கு 3 லார் கிப்பன்கள் (1 ஆண், 2 பெண்) 'தத்தெடுப்பு' என்ற பெயரில் ஜூன் 5, 2026 அன்று கைமாறியுள்ளதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
ஆனால், படிவம்-1 தமிழ்நாடு முதன்மை வனவிலங்கு காப்பாளரின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருப்பு நிலையில் உள்ளது.
மற்றொரு படிவம்-I மூலம், ஆகஸ்ட் 5, 2026 அன்று கேசவநாதனிடமிருந்து சென்னை இஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சின்னிக் கிருஷ்ணா ரங்கநாதன் (விக்ரமின் சம்பந்தி) என்பவருக்கு 'வளர்ப்புப் பிராணி' தேவையின் பெயரில் 'வாங்கும்' முறையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் லார் கிப்பன் கைமாறியுள்ளது. இந்த படிவம்-1 ஒப்புதலும் தமிழ்நாடு முதன்மை வனவிலங்கு காப்பாளரிடம் நிலுவையில் உள்ளது.
பதிவு செய்தால் போதுமா?
அயல்நாட்டு விலங்கை வெறுமனே பதிவு செய்வதால் மட்டுமே அதனை வைத்திருப்பதும் கைமாற்றுவதும் சட்டப்பூர்வமாகாது. சர்வதேச வர்த்தக ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் பரிசீலனையின் மூலமே அவை சட்டப்படி செல்லும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், விடியோவில் உள்ள லார் கிப்பன் குரங்கு 2-3 வயதானது என்றும், இது 2020-ல் லைகுரம் சிங்கினால் பதிவு செய்யப்பட்ட அதே குரங்காக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், மணிப்பூர்-மியான்மர் எல்லைப் பகுதி சட்டவிரோத வனவிலங்கு மற்றும் அயல்நாட்டு வளர்ப்புப் பிராணிகள் கடத்தலுக்கான சர்வதேச வழித்தடமாக உள்ளதால், அவ்வழியே கடத்தல் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக லைகுரம் சிங், கேசவநாதன் மற்றும் தொழிலதிபர் ரங்கநாதன் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நடிகர் விக்ரமின் உதவியாளர், இந்த சர்ச்சை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
Forest Department officials are conducting an inquiry following the controversy surrounding a video released by actor Vikram featuring a foreign monkey.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.