FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குடும்பங்களை ஈர்க்குமா மொத ராத்திரி..? திரை விமர்சனம்

மொத ராத்திரி திரைப்பட திரை விமர்சனம் குறித்து...

21 ஆகஸ்ட் 2026, 12:21 pm IST
குடும்பங்களை ஈர்க்குமா மொத ராத்திரி..? - டிஎன்எஸ்
பகிர்:

இயக்குநர் ராஜா கருப்புசாமி இயக்கத்தில் மைத்திரி பிக்சர்ஸ் மொத ராத்திரி திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக ரிஷிகாந்தும் கதாநாயகியாக அனிஷ்மாவும் நடித்துள்ளனர்.

திருமணத்தையும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது மொத ராத்திரி திரைப்படம். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சுரேந்திரன் ஒளிப்பதிவும், பாலு மகேந்திரா கலை இயக்கமும், படத்தொகுப்பு வேலையை அசோக் அர்ஜுனனும் செய்துள்ளனர்.

பல கதாபாத்திரங்கள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சேத்தன், வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, செல்லி கிஷோர், சங்கீத பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌசிக் கபிலன் என பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

நடிகர் ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் மருதநாயகம் எனும் பெயரில் நடித்துள்ளார். தன்னுடைய காதல் தோல்விக்கு பிறகு ஏற்பட்ட வருத்தத்தில் துபாய் சென்று பணியாற்றி வரும் ரிஷிகாந்த் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்த ஊருக்கு வீட்டு விசேஷத்திற்காக வருகிறார்.

மொத ராத்திரி திரைப்பட திரை விமர்சனம்

அவருக்கும் அனிஷ்மாவிற்கும் திருமணம் ஏற்பாடாகி இருக்கிறது என்பதே விமான நிலையம் வந்து இறங்கிய பிறகுதான் தெரிகிறது. தன்னுடைய குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில் அனீஷ்மாவை கரம் பிடிக்கிறார் ரிஷிகாந்த். ஆனால் தன்னுடைய காதலன் வருவான் என காத்திருந்த அனுஷ்மாவிற்கு திருமணம் நடந்தது பிடிக்கவில்லை. முதலிரவு நாளில் வீட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார் அவர். அவர் வெளியேறினாரா? வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்த ரிஷிகாந்த் என்ன ஆனார்? என்பதுதான் மொத ராத்திரி திரைப்படத்தின் கதை.

இயக்குநராக அறிமுகமாகும் ராஜா கருப்புசாமி இவ்வளவு கதாபாத்திரங்களை எழுதி இருந்தாலும் அதை சரியாக கொடுத்திருப்பது அவருடைய எழுத்தின் வலிமைக்கான சான்று. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் குடும்ப திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்று வந்தன. ஆனால் நாளடைவில் அவை மெல்ல மறைய தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், ராஜா கருப்புசாமியின் குடும்ப பாத்திரங்களை மையமிட்ட இந்தத் திரைப்படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அதே நேரத்தில் நகைச்சுவை உணர்வோடு சிறப்பாக அமைந்திருக்கிறது. போதாகுறைக்கு இயக்குநரும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி கலக்கியிருக்கிறார். குடும்ப கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் பார்வையாளர்களை ஒன்ற செய்வதற்கு பெருமளவு உதவி இருக்கிறது. முதல் பாதி முழுக்க சிரிப்பு சரவெடிகள் வெடிக்கின்றன.

பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்து வந்த ரிஷிகாந்த், நாயகனாக பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். காதல் தோல்வியை நினைத்து உருகும் இடம் தொடங்கி இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட வெட்கம் எழும்பி வரும் இடம் வரை அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அனீஸ்மாவிற்காக அவர் உருகும் இடங்கள் நாயகனாக அவர் வென்றுவிட்டதை காட்டுகிறது. சிறை, யூத் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அனிஷ்மா இந்தத் திரைப்படத்தில் மணப்பெண்ணாக நடித்திருக்கிறார். காதலனுக்காக காத்திருந்து அவர் பேசும் வசனங்கள் எல்லாம் முதல் பாதியில் சிரிக்க வைத்தாலும் இரண்டாம் பாதியில் அவர் மீது பரிதாபம் ஏற்பட செய்கிறது. கண்களை கொண்டு அவர் காட்டும் உணர்ச்சிகள் ஈர்க்கும்படியாக அமைந்திருப்பது படத்திற்கு பெரும் நம்பிக்கை. இவர்களுடன் அப்துல் லீ, பகவதி பெருமாள் மோதல் காம்பினேஷங்கள், சேத்தன், வெங்கடேசன் நடிப்பு, புல்லட் அரசியல் பேச்சு என அனைத்தும் இயல்பாக இருக்கின்றன. நாயகன், நாயகித் தாண்டி குடும்பத்திற்குள் இருக்கும் காதல் கதைகள் ரசிக்கச் செய்கின்றன. கெட்டி மேளத்தைப் பயன்படுத்திய பின்னணி இசை, ஒரு இரவைக் கொண்டு வந்து காட்ட முனைந்த ஒளிப்பதிவு, சீரியஸான நேரத்தில் நடக்கும் நகைச்சுவையை ஒர்க் அவுட் செய்த எடிட்டிங் என தொழில்நுட்ப பணிகளும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன. டை டக்கா பாடல் முணுமுணுப்பு ரகம்.

முதல் பாதி முழுக்க நகைச்சுவை வசனங்களாலும் யதார்த்தமான நடிப்புகளாலும் ஈர்த்து விடுகிறது திரைக்கதை. இத்துடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாக தோன்றலாம். தூத்துக்குடி வட்டாரத்தில் நடக்கும் இந்தக் கதை ஒரு கட்டத்திற்கு மேல் அதன் ஊர் மொழி நடையை மறந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் இவை படத்தின் ஓட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பெரிய லாஜிக் குறைகளை பார்ப்பதற்கு இடம் ஏற்படுத்தாத வண்ணம் திரைக்கதையை அமைத்து திருமண விருந்து கொடுத்திருக்கிறது படக்குழு.

படத்தின் தலைப்பு தான் மொத ராத்திரி என்றாலும் குடும்பங்களை ஈர்க்கும் வகையில் அமைத்து வென்றிருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி.

summary

Will 'Modha Rathiri' Appeal to Families? – A Film Review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments